இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் வெற்றியையடுத்து சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பரபரப்பு.
சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில்
இலங்கை அணியின் அபார துடுப்பாட்டத்தினால் இந்திய அணி தோல்வியை
தழுவியதையடுத்து இந்தத் தொடர் திறந்த தொடராகியுள்ளது.
'பி' பிரிவில் இனி நடைபெறவுள்ள போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ
அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுமாறு தொடர் மாறியுள்ளது. இது
அன்று பாகிஸ்தான் தென்னாபிரிக்காவை வீழ்த்தியதாலும் இலங்கை அணி
திட்டமிட்டு முதலில் இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைத்து 350
ஓட்டங்கள் வரையில் உயர்ந்திருக்க வேண்டிய ஓட்ட எண்ணிக்கையை 321
ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி பிறகு இலக்கை வெகு எளிதாக விரட்டி
வெற்றி பெற்றதாலும் ஏற்பட்டுள்ள நிலையாகும்.
சம்பியன்ஸ் கிண்ணம், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 'ஏ'
பிரிவை விடஇ -'பி' பிரிவில்தான் அதிகமான போட்டித் தன்மை கொண்ட
போட்டிகள் நடைபெறவுள்ளன. இலங்கை, தென்னாபிரிக்கா, இந்தியா,
பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று
இரண்டு புள்ளிகளுடன் உள்ளன.
இலங்கையுடனான போட்டியில் எளிதாக வென்று, -'பி' பிரிவில் முதல்
அணியாக இந்தியா அரையிறுதிக்குள் செல்லும் என்று
எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதைத் தவிடுபொடியாக்கி அதிர்ச்சியளித்துள்ளது இலங்கை.
பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணியை பாகிஸ்தான் அசைத்துப்
பார்த்துவிட்டது. இந்த இரண்டு திருப்புமுனைகளும் 'பி' பிரிவில்
அடுத்தடுத்து நடைபெறவுள்ள போட்டிகளை பரபரப்பாக்கிவிட்டன.
அடுத்ததாக இந்தியா -– தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் –- இலங்கை அணிகள் மோத உள்ளன.
இந்த இரண்டு போட்டிகளுமே, கிட்டத்தட்ட காலிறுதிச்சுற்று
போல்தான் அமையும். இந்தப் போட்டிகளில் வெல்லும் அணிகள் மட்டுமே
அரையிறுதிக்குச் செல்ல முடியும்.
இந்தப் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்குச் செல்ல ஓட்ட விகிதம் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரண்டு
அணிகளுக்கும் எதிரான போட்டிகளிலும் 300 இற்கும் அதிகமாக ஓட்டங்களை
குவித்துள்ளது. இதனால், சிறந்ததொரு ஓட்ட விகிதத்தை இந்திய அணி
தக்கவைத்துள்ளது. குறிப்பாக, இலங்கை அணியுடன் தோல்வியடைந்த போதும்
ஓட்ட விகிதம் சிறப்பாக உள்ளதால், இந்திய அணி '-பி' பிரிவில் தொடர்ந்து
முதலிடத்தில் உள்ளது.
ஆனால், அரையிறுதிக்கு முன்னேறபலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இரண்டு பிரிவுகளிலுமே எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் லீக்
சுற்றைப்போல் இல்லாமல், காலிறுதிச்சுற்றுபோலத்தான் இருக்கும்.
ஒவ்வொரு அணியும் அரையிறுதிக்குள் செல்ல கடுமையாகப் போராடியாக
வேண்டும்.
இதில், இங்கிலாந்து அணி மட்டும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில்
சற்று நெருக்கடி இல்லாமல் ஆடலாம். இங்கிலாந்து அணிக்குதான் அது சம்பிரதாயப்
போட்டியாக இருக்கும். அவுஸ்திரேலியாவுக்கு அது வாழ்வா... சாவா போட்டிதான்.
கருத்துகள் இல்லை: