மகளிர் உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம் : 8 நாடுகள் களத்தில்.
11ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது. தொடக்க நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் இலங்கை, நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
முப்பது தினங்கள் நீடிக்கவுள்ள மகளிர் உலகக் கிண்ணத்தில் மொத்தம் 28 லீக் போட்டிகளும் 2 அரையிறுதிப் போட்டிகளும் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியுமாக மொத்தம் 31 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதியும், 2-ஆவது அரையிறுதிப் போட்டி 20ஆம் திகதியும் நடைபெறுகின்றன. இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி லண்டனில் நடைபெறுகின்றது.
தொடக்க நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறன. இதில் இந்தியா -இங்கிலாந்து, நியூஸிலாந்து –- இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன.
இலங்கையில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இலங்கை மகளிர் அணி தகுதிபெற்றது.
கடந்த இரண்டு வருடங்களில் வெகுவாக முன்னேறியுள்ள இலங்கை மகளிர் அணி இம்முறை திறமையை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளது.
இலங்கை அணி வருமாறு-:
இனோகா ரணவீர (அணித் தலைவி), பிரசாதனி வீரக்கொடி (துணைத் தலைவி), சமரி அத்தபத்து, சந்திமா குணரட்ன, நிப்புனி ஹன்சிகா, அமா காஞ்சனா, ஏஷானி லொக்குசூரிய, ஹர்ஷிதா மாதவி, டிலானி மனோதரா, ஹசினி பெரேரா, சமரி பொல்கம்பொல, உதேஷிகா ப்ரபோதனி, ஓஷாதி ரணசிங்க, ஷஷிகலா சிறிவர்தன, ஸ்ரீபாலி வீரக்கொடி.
இந்தத் தொடரில் ஆறு தடவைகள் சம்பியனும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா, இம் முறை சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கு அனுகூலமான அணியாகக் காணப்படுகின்றது.
இளம் வீராங்கனைகளையும் அனுபவசாலிகளையும் கொண்ட அவுஸ்திரேலிய அணி மிகவும் பலம்வாய்ந்த ஒன்றாகும்.
மற்றொரு பலம்வாய்ந்த அணியாக இங்கிலாந்து மகளிர் அணி திகழ்கின்றது. சொந்த நாட்டில் விளையாடுவது இங்கிலாந்திற்கு கூடுதல் பலமாகும்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் கடந்த சில வருடங்களில் வெகுவாக முன்னேறியுள்ள அணி தென்னாபிரிக்க மகளிர் அணியாகும். இந்த சுற்றுப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு அனுகூல மான அணியாகத் தோன்றாத போதிலும் மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்ட அணியாகக் கருதலாம்.
அதேபோல் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியும் பலம் பொருந்திய அணியாகவே காணப்படுகின்றது. இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தின் நடப்பு சம்பியனும் அந்த அணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை: