2019 வரை திஸரதான் தலைவர் : மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அமைச்சர்
ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு அணித் தலைவரை நியமிக்கும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUukvA0TayD-z3U3v-RWuQiG4KHEmwAiN9uFuyiGJlJcoPuAGMdjCd2ysht8F8DDoAuDmLEXTooA18wj72-JML90c_DX9IRH4MgWz6xo2ZZ08rrDG7toWQpoBFwW9vR8oc5tYvqgjBGEUp/s400/494024529.jpg)
அத்தோடு எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை திஸர பெரேராவே தலைவராக நீடிப்பார் என்றும் அவர் தலைமையிலான உலகக் கிண்ண அணியை உருவாக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணி தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அடுத்தடுத்த பல தோல்விகளால் அணி ஆட்டம் கண்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியின் மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் தலைவராக இருந்த அஞ்சலோ மெத்தியூஸ் விலகிய நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு சந்திமாலையும், ஒருநாள் போட்டிகளுக்கு உபுல் தரங்கவையும் நியமித்தது அப்போதைய சனத் ஜயசூரிய தலைமையிலான தேர்வுக்குழு.
அதன்பிறகு நடைபெற்ற தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளைக் கண்டுவந்த உபுல் தரங்க தலைமையிலான இலங்கை அணி, பாகிஸ்தானில் சென்று விளையாட மறுத்த நிலையில் இருபதுக்கு 20 தொடருக்கு திஸர பெரேரா தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு தற்போது இந்தியாவுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை அணித் தலைமையில் மாற்றம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் திஸர பெரேராவை ஒருநாள் அணிக்கு தலைவராக அறிவித்தது தற்போதுள்ள லப்ரோய் தலைமையிலான தேர்வுக்குழு.
இலங் கைத் தலைவரை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான ஆஷ்லி டி சில்வா, இனி ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அந்தத் தொடரின் பெறுபேறுகளை வைத்தே அவர் தொடர்ந்து தலைவராக நீடிப்பாரா இல்லையா என்பதை முடிவுசெய்வோம் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை திஸர பெரேராவே தலைவராக நீடிப்பார் என்றும் தெரிவித் துள்ளார்.
கருத்துகள் இல்லை: